Saturday, April 25, 2015

தமிழகத்தில் தேவேந்திரகுலவேளாளர்களின் நிலை


தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் தலித்துகளில்உரிமைகள் ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்தியா விடுதலைபெற்று 58 ஆண்டுகள் ஆன பின்னரும் தமது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையிலேயே அவர்கள் இன்னமும் இருந்துவருகிறார்கள்.

நாகப்பட்டினம் அருகே கீழவெண்மணி என்னும் கிராமத்தில் 1960களில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் விவசாய தொழிலாளர்கள் கடும் அடக்கு முறையை சந்திக்க நேர்ந்தது. அவர்களின் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டபோது தலித் பிஞ்சுகள் கருகி சாம்பலாகியிருந்தன.
இந்த சம்பவம் பற்றிய தகவல்களுடன் ஆரம்பிக்கிறது தலித்துகள் பற்றிய டி.என்.கோபாலன் வழங்கும் தொடரும் துயரம் என்னும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம்.


தேவேந்திரகுல வேளாளர் நிலை:
தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர் இனத்தவர் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழுகின்றனர். ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் பறையர், அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்களைக் காட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் பொருளாதார ரீதியில் சற்று முன்னேறியவர்களாகக் கருதப்படுகின்றனர்.

சில காலத்துக்கு முன் தென்மாவட்டங்களில் இடைநிலை சாதியினரான முக்குலத்தோர் என்றழைக்கப்படும் தேவர் இனத்தவருக்கும் தேவேந்திரகுல வேளாளருக்கும் இடையே மோதல்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தன.

சாதிக் கொடுமை பற்றி விழிப்புணர்வு அடைந்த தலித் மக்கள் அந்தத் தளையிலிருந்து வெளிவருவதற்காக முயற்சிகளை எடுத்தபோது - பொதுவள ஆதாரங்களில் தமக்கும் பங்கு உண்டு என்று ஆதிக்க சாதியினரிடம் உரிமைகோரியபோது இந்த மோதல்கள் எழுந்தன.

1995ல் திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தவருக்கு எதிராக பொலிசார் மோசமாக நடந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் பற்றியும், தென் மாவட்டங்களில் தற்சமயம் நிலைமை எப்படி மாறி வந்துள்ளது என்பது பற்றியும் இரண்டாம் பாகம் ஆராய்கிறது.


ஆதி திராவிடர் நிலை:
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் 1940களிலும், ஐம்பதுகளிலும், பலரும் போற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் தலைமையில் நடந்த பல்வேறு போராட்டங்கள் விளைவாக ஆதிதிராவிடர் நிலையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிதருப்பதாகக் கருதப்படும் அங்கேயும் ஓரே அவலம்.

பறையர் அல்லது ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் தலித் பிரிவினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மாநிலத்தின் மக்கட்தொகையில் 19 சதம் தலித்துகள் என்றால் ஆதிதிராவிடர்கள் அதில் 70 சதம் இருப்பார்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க அளவு கல்வியறிவு பெற்ற சமூகமாக அது கருதப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் நிலமற்ற கூலிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் மீதான ஒடுக்குமுறையும் தொடர்வதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1997ஆம் ஆண்டு மதுரை அருகே உள்ள மேலவளவில் ஆதிதிராவிடர் இனத்தைச்சேர்ந்த அதன் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டனர். எட்டாண்டுகள் பின்னரும் அங்கே தலித்துகள் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகவே கூறுகின்றனர். மேல்சாதியினரோ பிரச்சினை எதுவுமே இல்லை, எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது என்றனர். வடமாவட்டங்களிலும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது.

பெரம்பலூர் பகுதியில் பருககல் கிராமத்தில் நாம் ஒரு தேனீர்கடையில் இரண்டுவித குவளைகளைப் பார்த்தோம். ஏன் அப்படி எனக் கேட்டபோது கடை உரிமையாளர் பதிலளிக்கமறுத்துவிட்டார். அங்கே இருந்த சில வன்னியர்கள் பாகுபாடு எதுவும் இல்லை என்றனர்.

அண்டைமாவட்டமான கடலூரிலோ சிறுத்த தொண்டமாதேவி என்ற கிராமத்தில் பாதுகாப்பற்ற சில ஆதிதிராவிடவீட்டுப் பெண்களை மேல்சாதியினர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதாக செய்திகள் இரண்டாண்டுகளுக்கு முன் வந்தன. தலித் அமைப்பான விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் போராட்டத்திற்கு பின் அங்கே நிலைமை கட்டுக்குள் வந்தது.

வன்னியர்களின் பிரதிநிதியாக கருதப்படம் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கமும் இணைந்து தமிழ்பாதுகாப்பு இயக்கம் இப்போது நடத்திவருவதால் வடமாவட்டங்களில் பதட்டம் சற்று தணிந்திருப்பதாக கருதப்படுகிறது.


அருந்ததியரின் அவலம்:
கிராமப்புறங்களில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாது, ஜீவிப்பதற்கு முற்றிலுமாக நில உடைமையாளர்களை சார்ந்து நிற்கிறார்கள் அருந்ததியர். நகர்புறங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளிகளாகவும் , மற்றும் துப்புரவுப் பணியாளர்களாகவும் நாம் இவர்களை சந்திக்கலாம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் ஆராய்ச்சி செய்துவரும் மாணவர் குருசாமி பல்கலைக்கழக வளாகத்திலேயே பிரச்சினை இருப்பதாக கூறினார்.

கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும்கூட கம்பம் நகர அருந்ததியர் அமைப்பின் தலைவர் கிருஷ்ணன் புகார் கூறினார். ஆனால் தேவேந்திரகுலவேளாளர் தலைவர்களில் ஒருவரான Late. பசுபதி பாண்டியனோ அப்படிஒரு சிக்கல் இருப்பதாகவே தன் கவனத்திற்கு வரவில்லை என்கிறார்.

புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்னமும் ஒருபடிமேலே போய் தேவேந்திரகுலத்தவர்க்கும், அருந்ததியருக்கும் இடையே பிரச்சினை இருப்பது எனக்கூறுவதே மேல்சாதியினரின் சதி என்கிறார். தேனிமாவட்டத்தில் ஒரு தலித் ஆர்வலர் அருந்ததியர் பின் தங்கியிருப்பதற்காகன காரணம் அவர்களே என்றார்.

துப்புரவுப்பணியாளர்களாகப் பணியாற்றும் ஆதி ஆந்திரர்கள் என்பவர்களும் அருந்ததியர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். இவர்கள் நிலை இன்னமும் பரிதாபத்திற்குரியதாகத்தான் இருக்கிறது.
சென்னையைச்சேர்ந்த தொழிற்சங்கத்தலைவர் புருஷோத்தமன் மலம் அள்ளும் பழக்கம் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்கிறார்.


மதமாற்றம் பலன் தருமா?
தமிழகத்தில் வாழும் தேவேந்திரகுலவேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அவலநிலை குறித்து இப்பெட்டக நிகழ்ச்சியின் கடந்த பகுதிகளில் பார்த்தோம். தலித்துகள் என்றழைக்கப்படும் இச்சமூகம் காலாகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறது. திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக பிராமண ஆதிககம் கணிசமான அளவு தகர்க்கப்பட்டும்கூட, தலித்மக்களுக்கு சமூக அந்தஸ்து இன்றளவும் மறுக்கப்படுகிறது.

இந்து மத வரையறைகளுக்குள் சிக்கியிருப்பதால்தான் தங்களுககு இப்படிப்பட்ட அவமானங்கள், எனவே மதம் மாறுவதே தங்கள் பிரச்சினைக்கு சரியான தீர்வு என பல தலித் சிந்தனையாளர் கூறிவந்திருக்கின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பலர் கிறித்துவர்களாக மாறியிருக்கின்றனர்.
பின்னர் கிறித்தவத்தில் நீதிகிடைக்காத தலித் மக்கள் இஸ்லாத்தை நாடத்துவங்கினர். இப்படியான மதமாற்றங்கள் தலித்துகளின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்ததா, அமையுமா என்பதை இந்தப் பகுதியில் ஆராய்கிறார் எமது டி.என். கோபாலன்.


பொருளாதாரம்:
சாதி இறுக்கங்களுக்கு அப்பால் தலித் மக்களின் பிந்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களது வறுமையும் எழுத்தறிவின்மையுந்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மக்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். இவர்களது உடமைகளும் மிகவும் குறைவானவையே.

இந்த நிலைகுறித்தும், இவற்றை சமூகம் எவ்வாறு கையாழுகிறது என்பது குறித்து இந்தப் பகுதியில் ஆராய்கிறார் டி.என்.கோபாலன்.


அரசியல் அதிகாரத்தை நோக்கி:
தலித்துகளின் நிலை குறித்து ஆராயும் இந்தப்பெட்டகத்தின் ஏழாவது பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை அடைவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகிறது. முக்கிய அரசியல் கட்சிகளில் தலித் இனத்தைச்சேர்ந்த தலைவர்களுக்கு முக்கிய இடம் தரப்படுவதில்லை அவர்கள் வெறும் காட்சிப்பொருளாகத்தான் வைக்கப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது.

தலித்துகள் அதிகார மையங்களை வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

தமிழ்த் தேசியம் குறித்த அணுகுமுறையில் தலித் அமைப்புகளுக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தலித்துகள் அரசியல் உரிமைகள் பெற வேண்டுமானால், தமிழ், திராவிடம் போன்ற முழக்கங்களைக் கைவிட வேண்டும் என்கிறார். ஆனால் , விடுதலைச் சிறுத்தைகளோ, இந்த விஷயத்தில் தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதமல்ல தலித்துகளை உள்ளடக்கிய தமிழர்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதே என்று கூறுகிறார்கள்.

தலித் கட்சிகள் தலித்துகளை அணி திரட்டுவது என்பது அரசியல் ரீதியானதாக இல்லாமல் தனிநபர்களைச் சுற்றியதாகவே அமைந்திருக்கிறது என்பது யதார்த்தமான உண்மை என்கிறார் அரசியல் ஆய்வாளர் அ.மார்க்ஸ்.


http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml




1 comment:

  1. இந்தியா விடுதலைபெற்று 58 ஆண்டுகள் ஆன பின்னரும் தமது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையிலேயே அவர்கள் இன்னமும் இருந்துவருகிறார்கள்.
    black salwar suit for ladies ,
    black salwar kameez for ladies ,

    ReplyDelete

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget