காதல் திருமணங்களை எள்ளி நகையாடுவதும், கலப்புத் திருமணங்களை சாடுவதும் தவறான போக்கு என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
“தர்மபுரி மாவட்டத்தில் இருவேறு சாதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் உள்ளங்கள், காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டதால், நாய்க்கன்கொட்டாயைச் சேர்ந்த பெண்ணின் தந்தை நாகராஜ், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது துயரச் சம்பவம் ஆகும். ஆனால், இதற்கு அப்பகுதி வாழ் தலித் மக்கள் பொறுப்பாளிகள் அல்ல.
அதற்காக, காதல் திருமணங்களை எள்ளி நகையாடுவதும், கலப்புத் திருமணங்களை நிந்திப்பதும், மிகவும் தவறான போக்கு ஆகும். கல்வியிலும், சமூக நிலையிலும், தங்களுடைய முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேறி வரும் தலித் சமூகத்து இளம் தலைமுறையினறை ஏளனம் செய்வதும், பரிகசிப்பதும் பண்புடைமை ஆகாது.
அதிலும், தலித் மக்களுக்காக மட்டும் அன்றி, தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பாடுபடுகின்ற ஒரு இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி, திரும்பத் திரும்ப அவர்களை இழிவுபடுத்திப் பேசுவது, மிகவும் கவலை தருகிறது. எனவே, சமய ஒற்றுமைக்கும், சமூக நீதிக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டி வந்து உள்ள தமிழ்நாட்டின் பெருமைக்குக் குந்தகம் நேராமல், சகோதரத்துவத்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடாமல், பொது அமைதியைப் பாதுகாக்க வேண்டியது, அனைவரின் கடமை ஆகும்”
இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தலித் மக்களை நிந்தித்து கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
